கொரோனாவின் கோரப் பிடியையும் அடுத்தடுத்த அலைகளின் அழுத்தத்தையும் தாங்க முடியாமல் மக்கள் மரண பயத்தில் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். இன்னொருபுறம் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சூழலிலும், தங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த செல்வங்களை எல்லாம் குடும்பத்தினரைக் காப்பாற்ற செலவு செய்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளோ, மக்களின் பயத்தின் மீதேறி உல்லாசமாக சவாரி செய்து கொண்டிருக்கின்றன.

படிக்க :
♦ தனியார்மயக் கொள்கையால் புழுத்து நாறும் இந்திய மருத்துவக் கட்டமைப்பு !!
♦ உபி : கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜனை நிறுத்தி பலி கொடுத்த மருத்துவமனை

சமீபத்தில், சில தனியார் மருத்துவமனைகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, அம்மருத்துவமனைக்கு நோயாளிகளை வரவழைப்பதற்காக கொரோனா இல்லாதவர்களுக்கும் பாசிட்டிவ் எனச் சான்று கொடுத்த ‘மெட் ஆல்’ என்ற தனியார் ஆய்வு நிறுவனத்தை நமக்கு நினைவிருக்கும். கடந்த மே மாதம் 19, 20 தேதிகளில் மட்டும் கொரோனா இல்லாத சுமார் 400 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என சோதனை முடிவுகளை இவ்வாய்வகம் தந்துள்ளது. மேலும், கொல்கத்தா ஆய்வகத்திலிருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரிகளை கள்ளக்குறிச்சியில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறி நாடகமாடியதும் அம்பலமானது.

இதன் உச்சமாக, இறந்தவரின் உடலை தாராமல் லட்சக்கணக்கில் பணம் கட்ட சொல்வது, இறந்ததைக் கூட சொல்லாமல் பணம் பறிப்பது என்று தனியார் மருத்துவமனைகளின் அக்கிரமங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இறந்தவர்களின் உடலையும் முகத்தையும் கடைசியாகப் பார்க்க விரும்பும் குடும்பத்தினரின் உணர்வைப் பயன்படுத்திக் கொண்டு பிணத்திலும் பணம் பார்க்கிறார்கள் பல தனியார் மருத்துவமனைகள்.

சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனை இதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு. கொரோனா தொற்றால் கடந்த மே மாதம் நான்காம் தேதி இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவீந்திரன் என்ற நோயாளி, ஜூன் 1-ம் தேதி உயிரிழந்தார். இறப்பதற்கு முந்தைய ஒரு வாரம் இவருக்கு சரியான சிகிச்சை தரப்படவில்லை என்கிறார்கள் உறவினர்கள். இறப்பதற்கு முதல் நாள் முன்பு கூட மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் 4 யூனிட் ரத்தம் வேண்டும் என்று கேட்டதால் அவர்கள் ரூபாய் 11,400-க்கு ரத்தம் வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே ரவீந்திரனின் சிகிச்சைக்காக ரூபாய் 15.5 லட்சம் கட்டியிருந்தபோதிலும், இன்னும் ரூபாய் 8 லட்சம் கட்டினால்தான் உடலை தருவோம் என்று உறவினர்களை மிரட்டியுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

இதேபோல, கடந்த வாரம் கோவை சுங்கம் பகுதியிலுள்ள ‘மனு’ என்ற தனியார் மருத்துவமனையின் கொள்ளையும் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது. இந்த மருத்துவமனையில் இருபது நாட்கள் சிகிச்சை பெற்று வந்த காதர் என்பவர் கடந்த வாரம் உயிரிழந்தார். அவருக்கு அளித்த சிகிச்சைக்கு மருத்துவமனை நிர்வாகம் ரூபாய் 20 லட்சம் கட்டணம் கேட்டது. ஏற்கனவே, 16 லட்சம் கட்டிய போதிலும் மீதமுள்ள 4 லட்சத்தை கட்டினால்தான் உடலை பெற முடியும் என்று கூறிய நிலையில் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்து உடலை மீட்டுள்ளனர்.

அதே கோவையில் உள்ள முத்தூஸ் என்ற மருத்துவமனையிலும் இதே கதை தான். தந்தை இறந்ததைக் கூட கூறாமல் அங்கேயே சிகிச்சை பெற்று வந்த மகன் நதீப் என்பவரிடம் பணம் பறிப்பதிலேயே மருத்துவமனை நிர்வாகம் குறியாக இருந்துள்ளது. தந்தை சிகிச்சைக்காக ரூபாய் 15 லட்சம் கேட்டு பிறகு குறைத்து கொண்டு பதினொன்றரை லட்சமும், மகனின் சிகிச்சைக்காக தனியாக இரண்டரை லட்சமும் கேட்டுள்ளனர். இறுதியில், மாவட்ட ஆட்சியர் தலையிட்ட பின்னர் உடலை வாங்கியுள்ளார் அவர். ஆனால், உடலைப் பெற்று வீடு திரும்பிய பிறகும் கூட மருத்துவமனை நிர்வாகம் அவரை பணம் கேட்டு தொந்தரவு செய்து கொண்டுதான் இருக்கிறது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வெளிச்சத்திற்கு வரும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று, எத்தனை வட்டிக்கு வேண்டுமானாலும், கடன் வாங்கி இருக்கின்ற சொத்து நகைகளை எல்லாம் அடமானம் வைத்து விற்று காசு புரட்டும் உறவினர்களின் இந்த உயிர் பயத்தை வைத்தே, இதுபோன்ற தனியார் மருத்துவமனைகள் சுரண்டி தின்று கொண்டிருக்கின்றன.

இப்படிக் கொள்ளையடிக்கும் மருத்துவமனைகளின் மீது அரசும் அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல், ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆள் அனுப்பி கட்டப்பஞ்சாயத்து செய்யும் நிலைதான் உள்ளது. அந்த நேரத்துக்கு மட்டும் உடலை வாங்கி தந்து விட்டு இறந்தவரின் உறவினர்களை தெருவில் விட்டு விடுகின்றனர். பிறகு மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் அவர்களை பணம் கேட்டு நச்சரிக்க தொடங்கி விடுகிறது.

தனியார் மருத்துவமனைகளின் இத்தகைய அட்டூழியங்களைக் கண்டுகொள்ளாமல் அதில் பங்கு வாங்கித் திண்பது அரசின் அனைத்த் உறுப்புகளின் ரத்தத்தில் கலந்த ஒன்றே என்றபோதிலும், பெருந்தொற்று காலத்திலும் கூட அது தொடரவே செய்கிறது.

இன்னொருபுறம், இப்பெருந்தொற்று காலத்தில் மட்டும், மருத்துவத் துறையில் சுமார் 24 கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஆனால், அதே சமயம், ஒரு நாள் வருமானம் ரூபாய் 140-க்கும் குறைவாக பெறுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6 கோடியில் இருந்து 13.4 கோடி பேராக உயர்ந்துள்ளது. பல மருத்துவமனைகள் ஒரு நாளைக்கு எழுவதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன. ஒருநாளைக்கு ரூபாய் 140 கூலி பெற்று, சோற்றுக்கு அல்லற்படும் ஒருவரால், இந்தப் “பிணந்தின்னிகளுக்கு” முன்னால் கொரோனாவே மேல்” என்றுதான் நினைக்க முடியும்.

இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், ஆக்சிஜன் இல்லாத படுக்கைக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 7,500 வெண்டிலேட்டரோடு கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 35,000 என்று நிர்ணயித்து, கொரோனா சிகிச்சைக்கு அதிகக் கட்டணத்தை மக்களிடம் இருந்து ஜேப்படி செய்துகொள்ளலாம் என அரசே சட்டப்பூர்வ ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருக்கிறது. இப்போது நாம் பேசும் நிகழ்வுகள் எல்லாம், மேற்படி ஜேப்படி ஏற்பாட்டிற்கும் மேலாக நடைபெறும் பகற்கொள்ளைகளைப் பற்றிதான்.

இத்தனியார் மருத்துவமனைகள், அதிகார வர்க்கத்தை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு தங்களை யாரும் அசைக்க முடியாது என்ற திமிருடன் செயல்படுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அரசின் தனியார்மயக் கொள்கையும் நிற்கிறது. இந்த தைரியத்தில் தான் விஜயா மருத்துமனை நிர்வாகத்தாரும் “யாரிடம் வேண்டிமானாலும் போய் சொல்” என்று நோயாளியின் உறவினர்களை மிரட்டுகிறது.

படிக்க :
இலாபத்திற்கான உற்பத்தியின் உலகமயமாக்கலும் – வைரஸ்களின் பரிணாமமும் !!
பெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்!

“அதிகமாக கட்டணம் வசூல் செய்யும் மருத்துவமனைகளின் உரிமம் இரத்து செய்யப்படும்” உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ள தி.மு.க அரசோ, நடைமுறையில் இவையெதையும் தடுக்க வக்கற்றதாக உள்ளது. இன்னொருபுறம், காப்பீடு என்ற பெயரில் மக்கள் பணத்தை தனியாருக்கு வாரியிறைத்து, அதையே சாதனையாகவும் காட்டிக் கொள்கிறது. தனியார் கொள்ளையைப் பொருத்தவரையில், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. தனியார்மயத்தை அமல்படுத்துவதில் ஓட்டுக் கட்சிகளிடையே கொள்கை வேறுபாடில்லை.


துலிபா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க