PP Letter head16.6.2021

மூடு டாஸ்மாக்கை !
மீண்டும் வெடிக்கட்டும் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டம் !

கொரோனா கால ஊரடங்கு தளர்வுகளோடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா கால உதவித்தொகையாக இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 கொடுக்கப்பட்ட நாளன்று டாஸ்மாக் திறக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆட்சியின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “அரசு கொடுக்கும் உதவித் தொகையானது வேறு வழியில் அரசுக்கே வந்து சேரும்” என்று கூறியதை மெய்ப்பிக்கின்றது இந்நிகழ்வு. யார் ஆட்சிக்கு வந்தாலும் குடிகெடுக்கும் டாஸ்மாக்கை மூட மாட்டார்கள். மக்கள் போராட்டம் ஒன்றே டாஸ்மாக்கை மூடும் என்ற உண்மயையும் அறிவிக்கிறது.

படிக்க :
♦ ஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு ? மூடு டாஸ்மாக்கை!! || மக்கள் அதிகாரம்
♦ ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்

டாஸ்மாக் திறக்கப்பட்ட இரு நாட்களுக்குள்ளேயே எத்தனை குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை ஆராய வேண்டும். ரேசன் கடையில் இருந்து உதவித் தொகையை மனைவியிடம் இருந்து பிடுங்கிக்கொண்டும் / தானே உதவித் தொகையை பெற்றுக் கொண்டும் நேரடியாக டாஸ்மாக் செல்கிறார்கள்.

திருச்சி – கரூர் மாவட்ட எல்லைப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சரக்கு வாங்க குடிமகன்கள் ஆர்வமாக இருந்ததாகவும், இதில் இளையவர்களுக்கு போட்டியாக முதியவர்களும் களத்தில் இருந்ததாகவும் பாலிமர் செய்தியில் ‘சுவாரசியமான’ குறிப்பு வாசிக்கப்படுகின்றது.

காத்திருந்தவர்களின் வீடுகளில் நேற்று எத்தனை சண்டை – சச்சரவுகள் ஏற்பட்டிருக்கும்? பெண்கள் மீதான தாக்குதல்கள் – வன்கொடுமைகள் நடத்தப்பட்டு இருக்கும்? எத்தனை விபத்துக்கள் நடந்திருக்கும்?

இளம் பெண் ஒருவர் “பிராந்தி வேண்டாம், மூணு பாட்டில் பீர் கொடுங்க” என்று கேட்டு வாங்கிச் செல்கிறார். உடனே “பெரியார் பேத்தியைப்பார்!” என்று பிஜேபி கும்பல் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்க, அதற்கு பதிலடியாக பெரியார் இயக்க ஆதரவாளர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணமான அரசைப் பற்றி துளியும் விமர்சிக்க தயாராக இல்லை.

கள்ளச்சாராயம் – போலி மதுவினை தடுப்பதற்காக கடும் விமர்சனங்களுக்கிடையில் டாஸ்மாக் திறக்கப்படுவதாகவும் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்றால் டாஸ்மாக் மூடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த ஆட்சியின் ஊரடங்கின் போது “ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு?” என்று அவர் பிடித்திருந்த முழக்கத்தட்டிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் மு.க.ஸ்டாலின்.

அவருக்கு ஆதரவாக தமிழகத்தின் அமைச்சர்களும் அவரது கட்சியினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

கடந்த ஆட்சியில் எடப்பாடியும் அவரது அமைச்சர்களும் மக்களின் நலனுக்காகவே டாஸ்மாக் திறக்கப்படுவதாக கூறியதையே ரீமேக் செய்து திமுக அரசும் கூறுகிறது. கள்ளச்சாராயமும் போலி மதுவும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், அதனால் டாஸ்மாக் திறக்கிறோம் என்பது எவ்வளவு கேவலமான வாதம்? அதை தடுக்க வக்கில்லாமல்தான் ஒரு அரசு இருக்கிறதா?

மூடு டாஸ்மாக்கை !

11 மாவட்டங்கள் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் ஒரு நாளில்மட்டும் ரூபாய் 165 கோடி டாஸ்மாக் மூலம் வசூல் செய்யப்பட்டு இருக்கிறது.கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பின்றி மக்கள் வாடிக்கொண்டு இருக்கும் சூழலில் மக்களின் பொருளாதாரம் ரூபாய் 165 கோடி சுரண்டப்பட்டு இருக்கிறது. இந்த உண்மையில் இருந்தல்லவா இப்பிரச்சினையைப் பார்க்க வேண்டும் ?

டாஸ்மாக் அரசியல்

தனியார்மயம் – தாராளமய காலகட்டத்திற்கு பிறகு அரசின் அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. இச்சூழலில் சேவைத் துறைகளும் பாதுகாப்புத் துறையும் கூட கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படுகின்றன.

இந்த தனியார்மய – தாராளமய – உலகமயப் பொருளாதாரம் தனக்கான நுகர்வுப் பண்பாட்டை உருவாக்குகிறது. போதை – நுகர்வு – பாலியல் சீரழிவு என அனைத்தையும் இந்தப் பொருளாதாரம் உருவாக்குகிறது. கடந்த 30 ஆண்டுகளில் சுரண்டல் தீவிரமாகியுள்ளது. 8 மணி நேர உழைப்பு, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பதெல்லாம் காணாமல் போய்விட்டன. சுரண்டல் தீவிரமடைய தீவிரமடைய அதற்கெதிரான போராட்டங்கள் தீவிரமடையும். அதை மட்டுப்படுத்தவும் ஒழித்துக்கட்டவுமே சீரழிவு பண்பாட்டை பரப்புகின்றது அரசு.

மதுவிலக்கு அன்றும் இன்றும்

2015 – 2016-ஆம் ஆண்டில் மக்கள் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தார்கள். டாஸ்மாக் கடைகள் முற்றுகை, டாஸ்மாக் கடைகள் உடைப்பு என திரும்பும் பக்கமெல்லாம் போராட்டங்கள் நடைபெற்றன. அதில், மக்கள் அதிகாரம் அமைப்பின் பங்கு மிகவும் முக்கியமானது. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் (அதிமுக, பாஜக, பாமக.. தவிர) சந்தித்து “டாஸ்மாக்கை மூடு” என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டினோம். திமுக தனது தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக்கை மூடுவோம் என்று அறிவித்தது. ஜெயயலலிதா படிப்படியாக டாஸ்மாக்கை மூடுவோம் என்று அறிவித்தார்.

2016-ஆம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மாநில நெடுஞ்சாலைகளை, மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்றி அங்கே டாஸ்மாக் கடைகளை திறந்தார். அந்த நடவடிக்கைகளை எல்லாம் திமுக கடும் விமர்சனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2021-ஆம் ஆண்டு திமுக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற வாக்குறுதி எதுவும் கொடுக்கவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு மக்களின் உணர்வுகளை பயன்படுத்திக் கொள்வது என்பதைத் தாண்டி திமுக-விடம் ஏதும் இல்லை. 2016-ஆம் ஆண்டு கொடுக்கபட்ட வாக்குறுதிகள் 2021-ஆம் ஆண்டு செல்லுபடியாகாது என்பதை தனது செயல்மூலமாக அறிவித்திருக்கிறது.

திமுக ஆதரவு கட்சிகள், அறிவுஜீவிகளின் மவுனம்

திமுக-வின் ஆதரவு கட்சிகள் டாஸ்மாக் திறப்பு விசயத்தில் வெளிப்படையாக பச்சோந்தித்தனமான வாதம் செய்கின்றன. டாஸ்மாக் திறக்கவில்லை என்றால் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் என்கிறார் ப.சிதம்பரம். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலோ பூரண மதுவிலக்கு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மற்ற
திமுக ஆதரவு கட்சிகள் இப்பிரச்சினை குறித்து நேரடியாக எதுவும் பேசவில்லை.

ஆனால், அக்கட்சிகளைச் சேர்ந்தோர் ஊடகங்களில் வேறுவகையான விவாதங்களை கிளப்பி வருகின்றனர். “டாஸ்மாக்கை மூடு” என்ற கோரிக்கைக்கு 2016-ஆம் ஆண்டு ஆதரவாக இருந்தவர்கள் தற்போது “படிப்படியாகத்தான் மதுவிலக்கு அமல்படுத்த முடியும், உடனே டாஸ்மாக்கை மூட முடியாது, குடிகாரர்கள் பாதிக்கப்படுவார்கள்” ஆகிய பச்சோந்தித்தனமான கருத்துக்களை பரப்பி மொத்த இலக்கையே திசை திருப்புகின்றனர். இதை ஏன் 2016-ஆம் ஆண்டு பேசவில்லை?

டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று மாங்குமாங்குவென கட்டுரைகளை எழுதிய அறிவுஜீவிகள் அமைதியாக இருக்கிறார்கள். இன்னும் சிலரோ “மூடு டாஸ்மாக்கை” என்ற கோரிக்கைக்கு எதிராக பூரணமதுவிலக்கு சாத்தியமல்ல என்று கூறுவதும், வெளிநாட்டு சரக்கு அடித்துக் கொண்டு இருக்கும் போட்டோக்களை வெளியிடுவதன் நோக்கம் என்ன? ஏன் இதையெல்லாம் 2016-ம் ஆண்டுகளில் செய்யவில்லை? திமுக ஆட்சி மீது எவ்விதத்துரும்பும் படாமல் பாதுகாத்து பரிசில் பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் போல.

அதிமுக – பிஜேபி ; அயோக்கியர்களின் புகலிடம் மக்கள் பிரச்சினை

டாஸ்மாக் திறக்காதே ! என்ற தலைப்பில் பிஜேபி-யினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வமோ “டாஸ்மாக் திறக்கக் கூடாது” என்று அறிக்கை கொடுத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே புதுச்சேரியில் சாராயக்கடைகளை அப்பிரதேச ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்தார். கர்நாடகாவில் சாராயக்கடைகளை திறந்தது பிஜேபி-யின் எடியூரப்பா. இவர்களுக்கு எல்லாம் தமிழகத்தில் டாஸ்மாக்கை திறக்க வேண்டாம் என்று சொல்வதற்கு தகுதி உள்ளதா என்ன?

சோமபானம், சுராபானம் என்று போதை வஸ்துகளை புனிதமாக கருதிய புராண காலம் முதல் இப்போது வரை போதை, பாலியல் சீரழிவுகளின் கூடாரமான பிஜேபி – ஆர்.எஸ்.எஸ் கும்பல் இப்போது டாஸ்மாக் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறது.

கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடியோரின் மீது போடப்பட்ட வழக்குகள் அளவிடமுடியாது. திருப்பூர், சாமளாபுரத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிய ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்த பாண்டியராஜன் என்ற ஏ.டி.எஸ்.பி-க்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. டாஸ்மாக் எதிர்ப்பு போராளி சசி பெருமாள் கொல்லப்பட்டது முதல் டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் ஏராளம். தமிழகத்தையே மொத்தமாக சுரண்டி கொழுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு டாஸ்மாக் பற்றிபேச என்ன தகுதி இருக்கிறது?

இப்படி தமிழகத்துக்கு, தமிழினத்திற்கு எதிரான அதிமுக – பிஜேபி கும்பல் தங்களை இருப்பு வைத்துக் கொள்வதற்காக டாஸ்மாக் பிரச்சினையில் பதுங்கிக் கொள்கிறார்கள். டாஸ்மாக் திறப்புக்கு எதிராக தமிழகத்தின் முற்போக்கான அமைப்புகள் எல்லாம் கொதித்து எழுந்திருந்தால் பிஜேபி – பாமக-வின் போராட்டங்கள் எல்லாம் காணாமல் போயிருக்கும். இனி மக்கள் பிரச்சினையில் அதிமுக – பிஜேபி-யினர் தொடர்ந்து தலையிடுவார்கள். திமுக மீது தூசு படக்கூடாது என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தால் தமிழகம் இன்னொரு புதுவையாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது.

முழக்கம் மட்டுமல்ல; மூளையே மாற்றம் அடைந்திருக்கிறது !

டாஸ்மாக் பிரச்சினை எதிரிகளான அதிமுக – பாஜக-வை மட்டுமல்ல துரோகிகளையும் அம்பலப்படுத்தி இருக்கிறது. “மூடு டாஸ்மாக்கை !” என்ற முழக்கம் ‘டாஸ்மாக்கை திறக்காதே !’ என்றும் ‘தமிழக முதல்வருக்கு டாஸ்மாக் மூடுவது சாத்தியமே’ என்றும் மாறி இருக்கிறது.

ஏன் மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தை இவர்கள் பயன்படுத்துவதில்லை? மூடு டாஸ்மாக்கை என்பது மக்களின் ஆணை, அதை இப்போது திமுக-விற்கு பயன்படுத்த முடியுமா? குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே என்ற முழக்கம் காணாமல் போய் தமிழக முதல்வருக்கு சாத்தியம் என்று கெஞ்சிக்கொண்டு இருப்பதில் போய் அல்லவா முடிந்திருக்கிறது.

பாசிசம் பற்றிய அரசியல் புரிதல் இல்லை என்பதல்ல பிரச்சினை; அரசு அதிகாரத்துடன் கூடிக்குலாவி தங்களின் கோரிக்கைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நவீன யுத்தியே இந்த முழக்க மாற்றத்துக்கு காரணம்.

இனி வருங்காலம் ???

திமுக அரசின் தவறான செயல்பாடுகளை முற்போக்கு அமைப்புகள் எல்லாம் எப்படி டீல் செய்யப்போகின்றன என்பதற்கு டாஸ்மாக் பிர்ச்சினை என்பது ஒரு தொடக்கமே. டாஸ்மாக் திங்கட்கிழமை திறக்கப்பட்டதும் அன்றைய தினம் பொறுக்கி கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்ட செய்தி பிரபலமாக்கப்பட்டதும் வேறு வேறான சம்பவங்கள் அல்ல. திமுக-வின் ஐ.டி டீமை விட பெரிய நெட்வொர்க்கையும் ஆளும் வர்க்க ஆதரவையும் கொண்டது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.

அதனால்தான் மயிரிலும் மலராது என்று பெருமை பீற்றிக் கொண்டிருந்த தமிழ்நாட்டில் 4 பேர் பிஜேபி-யின் எம். எல்.ஏக்களாகி இருக்கின்றனர். மொடக்குறிச்சியின் திமுக வேட்பாளரான திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசனின் தோல்வி எப்படி நேர்ந்தது என்பதை கவனியுங்கள். இதுவரை யாரென்றே கேள்விப்படாத சரஸ்வதியை வைத்து தோற்கடித்திருக்கார்கள். ஒரு தொகுதியில் வருடக் கணக்காக வேலை செய்து யாரையும் தோற்கடிக்க முடியும் என்பதை தெரிவிக்கிறார்கள். கடந்த பத்தாண்டு அதிமுக அட்சியின் அவலங்களையும் மீறி அறுபதிற்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வென்றிருக்கிறது.

ஆட்சி அதிகாரத்துக்கு அரிதாரம் பூசியபடியே பாசிசத்தை வீழ்த்த முடியாது. கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களை எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் கட்டமைக்கிறோமோ அதுமட்டுமே பாசிசத்தை வீழ்த்துவதற்கான துவக்கமாக இருக்கும்.

மக்களோடு துணை நிற்பது மட்டுமே நமது கடமை

“மூடு டாஸ்மாக்கை!” என்ற கோரிக்கையானது மக்கள் மத்தியில் தற்போது பரவலாக இல்லை. மக்கள் அதிகாரம் அமைப்பாகிய நாங்கள் மட்டுமே இக்காலகட்டத்தில் முதலில் முன்வைத்தோம். தமிழ்த்தேச மக்கள் முன்னணி, மனிதி உள்ளிட்ட அமைப்புக்கள் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளன.

படிக்க :
♦ விவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு ! || மக்கள் அதிகாரம்
♦ அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்கு !! || மக்கள் அதிகாரம்

தேர்தல் பாதை இடதுசாரிகள் – பெரியாரிய அமைப்புக்கள் – முற்போக்காளர்கள் – அறிவு ஜீவிகள் என யாரின் துணையின்றியும் மக்களுடன் மட்டுமே களத்தில் நிற்கிறோம்.

ஒரு பிரச்சினைக்கு மக்கள் ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை வைத்து முடிவு எடுக்க முடியாது. இப்போது “மூடு டாஸ்மாக்கை” என்ற முழக்கம் மேலெழாமல் இருக்கலாம். ஆனால், கார்ப்பரேட் சுரண்டல் டாஸ்மாக் மட்டுமல்ல அனைத்துவிதமான பிரச்சினைகளையும் மேலெழ வைக்கும். அதற்கு, மக்களோடு துணை நிற்பது மட்டுமே நமது கடமை.


மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க