அரும்பாடுபட்டு நிலத்தை திருத்தி நீர் பாய்ச்சி வேளாண்மை செய்து வைத்திருக்கும் உங்கள் விளைநிலத்தில், திடீரென ஒருநாள் தங்களை அரசாங்க அதிகாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வந்து, விளைந்து நிற்கும் பயிர்களுக்கு மத்தியில் சாலை அளவுகற்களை நட்டு வைத்து இந்த நிலத்தை நாங்கள் சாலை அமைக்க கையகப்படுத்துகிறோம் என்று சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இது உங்கள் வாழ்வாதாரம் பறிக்கப்படும் செயல்தானே. இதற்கு எதிராக போராடுவதை தவிர உங்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது? அது தான் தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர், வாசுதேவநல்லூர் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு நடந்திருக்கிறது. அவர்கள் தங்கள் விளைநிலங்களை காத்துக்கொள்ள போராடி வருகிறார்கள்.
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை சுமார் 147 கி.மீ தூரத்துக்கு NH 744 என்னும் பெயரில் நான்கு வழிச்சாலை அமைக்க 1,863 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டிருப்பது குறித்த ஒரு பத்திரிகை செய்தி கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் தொடங்கி செங்கோட்டை வரையிலான 69 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைய உள்ளது.
அந்த பகுதி மக்களை எந்த வகையிலும் கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு திட்டத்தை அவர்கள்மீது அரசாங்கம் திணிக்கத் துணிந்திருக்கிறது. இதனால் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் உணர்ந்திருக்கின்றனர். இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தால் முப்போகம் விளையும் விவசாய நிலங்கள் 1700 ஏக்கர், 3 லட்சம் தென்னைகள், 200 திறந்தவெளி கிணறுகள், 500 ஆழ்துளை கிணறுகள், 200 வீடுகள் பாதிக்கப்படும். மேலும், இந்த சாலை தென்காசி மாவட்டத்தில் நுழையும்போது, 7 கண்மாய்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட நீரோடைகள், ஆயிரக்கணக்கான வாழை, எலுமிச்சை, காட்டு மரங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது.
படிக்க :
♦ எட்டு வழிச்சாலை : நிலத் திருட்டுக்குப் பெயர் வளர்ச்சி !
♦ கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
இந்த சாலை நேராக பயணிக்காமல் குறுக்கும் நெடுக்குமாக விளைநிலங்களில் பயணிப்பது போன்று ஏன் திட்டமிடப்பட்டிருக்கிறது? என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏதோ உள்நோக்கத்துடன் இந்த சாலை போடப்பட உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட விவசாயிகள் தங்களது எதிர்ப்பை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்தினர். தங்கள் விளைநிலங்கள் பாதிக்காதவாரு சாலைக்கான மாற்றுப் பாதையின் வரைபடத்தையும் அவர்கள் சமர்பத்தினர்.
ஆனால், அரசாங்கம் அவர்களின் விளைநிலங்களின் வழியாக சாலை போடுவதில் உறுதியான இருந்ததால், இறுதியாக தங்கள் நிலங்களை காத்துக்கொள்ளும் பொருட்டு சாதி மத பேதமின்றி
“NH 744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கம்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன்கீழ் போராட்டங்களை ஒருங்கிணைத்தனர். போராட்டங்களில் கலந்து கொள்ளும் பெரும்பாலானவர்கள் இந்த நிலங்களை மட்டுமே பிழைப்பாதாரமாக கொண்டவர்கள்.
இந்த சாலையால் தங்கள் விளைநிலங்கள் பாதிக்கப்படுவது குறித்து வாசுதேவநல்லூர் தொகுதியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் மனோகரனை சந்தித்து முறையிட்டனர். அவர், “இது மத்திய அரசின் திட்டம் இதை எங்களால் எதிர்க்க முடியாது” என்று கூறிவிட்டார். அப்போதைய பாஜகவின் அடிமை அதிமுக ஆட்சியாளர்களால் அதற்குமேல் என்ன சொல்லிவிட முடியும்!! சாலை பற்றிய விவரங்களை அதிகாரிகளிடம் விவசாயிகள் கேட்டிருக்கின்றனர்.
முதலில் அதிகாரத் திமிரோடு தர மறுத்திருக்கிறார்கள். பின்னர் வரைபடத்தை கொடுத்துள்ளார்கள். ஆனால், அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களுக்கு சாலை பயணிக்கும் வழித்தடம் முன்பே தெரிந்திருக்திறது. அதை பயன்படுத்தி சாலையின் வழித்தடத்தின் ஓரத்தில் இப்பொழுதே நிலங்கள் வாங்கி போட்டுவிட்டனர். சாலை வந்த பின்னர் அதை விற்று லாபம் பார்க்கவோ, சாலையோரத்தில் வணிக வளாகம் கட்டவோ இதை பயன்படுத்தி கொள்வார்கள் என்பது தெளிவு.
திருமங்கலம் முதல் செங்கோட்டை வரை செல்லும் பழைய பாதை பெரும்பாலும் பொது மக்கள் பயணிக்கவும் சுற்றுலா பயணிகள் பயணிக்கவும் பயன்படுவது. அதனால் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, குற்றாலம் போன்ற முக்கிய நகரங்களோடு அது இணைந்திருப்பது அத்தியாவசியமானது. ஆனால், இந்த பழைய சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்யவே போடப்படுவதாக சொல்லப்படும் இந்த புதிய சாலை ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி போன்ற முக்கிய நகரங்களை இணைக்காமல் செல்கிறது.

இந்த சாலை அமைவதில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவதை தவிர்ப்பதற்காகவே இந்த சாலை, புதிய சாலை இல்லை, பழைய சாலையின் விரிவாக்கம்தான் என்று அப்பட்டமாக பொய் சொல்கிறார்கள் அதிகாரிகள். சிவகிரி முதல் உள்ளாறு வரை பயணிக்கும் இந்த NH 744 சாலைக்கும் நெல்லை வன உயிரின சரணாலயத்திற்கும் இடையே உள்ள தூரம் 6 கி.மீ எனவும், சாலை அமைப்பது தொடர்பாகவும் பாலம் கட்டுவது தொடர்பாகவும் எவ்விதமான அனுமதியும் வனத்துறையால் வழங்கப்படவில்லை எனவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வனத்துறை தெரிவித்துள்ளது. வன உயிரின சரணாலயத்திலிருந்து 10 கி.மீ சுற்றளவிற்குள் எந்தவித திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என விதிமுறை இருக்கும்போது இந்த சாலை வன உயிரின சரணாலயத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைக்கப்படுவது எப்படி? என்று 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளனர்.
“வழக்கமாக நான்கு வழிச்சாலைகளுக்காக 27 முதல் 30 மீட்டர்கள் அகலத்திற்குதான் இடம் கையகப்படுத்துவது வழக்கம். ஆனால், 8 வழிச்சாலைக்குரிய 60 முதல் 63 மீட்டர்கள் அகலம் வரை கையகப்படுத்துகிறார்கள். சில இடங்களில் 140 மீட்டர்கள் அகலம் வரை கையகப்படுத்துகிறார்கள். இதை மக்கள் விபரீதமாக உணர்கிறார்கள். அதாவது நான்கு வழிச்சாலை என்று சொல்லிவிட்டு எட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுத்துள்ளார்கள் என்பதுதான் வேதனை” என்று நக்கீரன் பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது.
தென்காசி மாவட்டத்தின் தலைநகரமான தென்காசியில் இருந்து திருநெல்வேலி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த NH-744 நான்கு வழிச்சாலை தென்காசி அருகில் கூட வரவில்லை. இதனால் அந்த நெல்லை முதல் தென்காசி நான்கு வழிச்சாலையையும் இந்த புதிய NH-744 சாலையையும் எப்படி இணைப்பீர்கள் என்று கேட்டால், அதற்கு தனி இணைப்புச் சாலை திட்டம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் அதிகாரிகள். எத்தனை கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் எதற்காக இப்படி விரயம் செய்யப்படுகிறது? எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளின் லாப நோக்கத்திற்காகதான்.
முதலில் திமுகவை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். NH-744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தின் தலைவர் மாடசாமியே ஒரு திமுக பிரமுகர்தான். இந்த பாஜக அடிமை அதிமுக அரசு போய் திமுக ஆட்சி மலர்ந்தால் தமது நிலப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பினார்கள்.
அந்நிலையில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது, தொகுதி வேட்பாளர் தனுஷ் குமார் “NH-744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கம்” ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த நான்கு வழிச்சாலையை எதிர்ப்பதாக உறுதியளித்துள்ளார். இதனை நம்பி வடகரை, அச்சன்புதூர் ஆகிய பகுதிகளில் போராட்ட சங்கத்தினர் வீடுவீடாக சென்று தங்கள் நிலங்களை மீட்க திமுகவிற்கு வாக்களிக்கும்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கனிமொழி அவர்கள் பேசுகையில், “இந்த நான்கு வழிச்சாலை தனியார்களுக்கும் முதலாளிகளுக்கும் சாதகமாக அமைக்கப்படுகிறது. வேண்டுமென்றே விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையில் தனியாருக்கு ஆதரவாக சாலை அமைக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். கமிஷன் வந்தால் போதுமென்ற நிலையில் அனைத்து துறைகளும் செயல்பட்டு வருகின்றன” என்றார்.
எல்லாம் தேர்தல் நாடகத்திற்காகதான்.
இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணி குறித்த ஆட்சேபனை மனு அளித்தவர்களிடம் விளக்கம் கேட்க வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், 150-ற்கும் மேற்பட்ட நில உரிமையாளர்கள் ஆட்சேபனை மனு அளித்துள்ள நிலையில் வெறும் 57 பேரை மட்டும் விசாரணைக்கு அழைத்திருந்தனர். இதனை சுட்டிக்காட்டி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அதிகார வர்க்கம் எவ்வளவு கள்ளத்தனமாக நடந்துகொள்கிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டுதான் இது.
சட்டமன்ற ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, போராட்ட சங்கத் தலைவர் மாடசாமி அவர்கள் தலைமையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்துப் சாலைப் பிரச்சினை தொடர்பாக மணு கொடுத்துள்ளனர். திருமங்கலம் முதல் கொல்லம் வரை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க நிலமெடுப்பு செய்வதற்கு இந்திட்டத்தினை மாற்றுப்பாதையில் செயல்படுத்த போராட்டக் குழுவினர் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தமிழக பொதுப்பணித்துறை (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) அமைச்சர் போராட்டக் குழுவினரின் இந்த கோரிக்கையை ஆராய்வதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை சேர்ந்த இரண்டு பொறியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையை சேர்ந்த இரண்டு பொறியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்க உத்திரவிடப்பட்டிருந்தது.
இதனால் சாலை எப்படியும் மாற்றுப்பாதையில் சென்றுவிடும் என்று நம்பி விவசாயிகள் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக நினைத்து மகிழ்ந்திருந்திந்தனர். ஆனால், அவர்கள் மகிழ்ச்சி நிலைக்கவில்லை.
அந்த உத்தரவின் படி, 30/10/21 மற்றும் 06/11/21 ஆகிய நாட்களில் இந்த குழு தனது கூட்டங்களை நடத்தியது. அதில் திருமங்கலம் முதல் கொல்லம் வரை நான்கு வழிச்சாலை திட்டத்தின் சீரமைப்பு (Alignment) பற்றி விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பாதையில் அதாவது முப்போகம் விளையும் விளைநிலங்கள் வழியாகவே சாலையை கட்டமைப்பது என்றும்; மேலும் புதிதாக கொடிக்குறிச்சியில் இருந்து தென்காசிக்கு இணைப்புச் சாலை அமைக்க தமிழக முதன்மை செயலாளர் மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு பரிந்துரைத்துள்ளது இந்த குழு.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தமிழக முதன்மை செயலாளர் மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வரையறுக்கப்பட்ட பாதையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படவும் கொடிக்குறிச்சியில் இருந்து தென்காசிக்கு இணைப்புச் சாலை அமைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
சில மாதங்கள் கழித்து, அமைச்சர் அமைத்த குழு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வரையறுத்த பாதை வழியாக சாலை போட முடிவெடுத்து விட்டதாக தகவல் வந்தது. இது பற்றி விவசாயிகள் விசாரித்தபோது, குழுவில் இருந்த சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் இருவரும் இரண்டு கூட்டங்களில் ஒன்றில் கலந்து கொள்ளவில்லை என்பது தெரிய வருகிறது. ஏன் என்ற கேட்டால், “என்னை குழு கூட்டத்திற்கு போன் செய்து அழைத்தார்கள், நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன்” என்று தெனாவெட்டாக பதில் சொல்லியுள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு “நான் உங்களில் ஒருவன் எனக்கு ஓட்டுப்போடுங்கள்” என்று கெஞ்சுவதும், தேர்தலில் வெற்றி பெற்று பதவியை பார்த்த பின்பு இப்படி தங்களை நம்பிய மக்களுக்கு பச்சையாக துரோகம் செய்வதும் அரசியல்வாதிகள் இயல்புதான். இதற்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எந்த வகையிலும் விதிவிலக்குகள் அல்ல.
மேலும் அமைச்சர் எ.வ. வேலுவிடம் இதுபற்றி விவசாயிகள் கேட்டபோது, அவர், “அன்று முதல்வர் சொன்னார், அதனால் கூட்டம் நடத்தினோம். ஆனால் இன்று முதல்வர் ஒன்றும் சொல்லவில்லை. இது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் திட்டம். என்னிடம் இதுபற்றி கட்சிக்காரர்கள் இப்படி கேட்டு வரவேண்டாம்” என்று கூறியுள்ளார்.
