இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !
1991 முதல் 2021 வரையிலான காலங்களில் உக்ரைனுக்கு பெருமளவிலான இராணுவ உதவிகளை செய்திருக்கிறது அமெரிக்கா. 1991-2014 வரை சுமார் 380 கோடி டாலர் அளவிற்கான இராணுவ உதவிகளை செய்திருக்கிறது.
இரஷ்ய – உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 1
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, ‘நவ நாஜிக்களை ஒழிப்பதற்கான சிறப்பு இராணுவ நடவடிக்கை’ என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்தது இரஷ்யா. இரண்டு மாதங்கள் ஆகின்றன, போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது, இரஷ்யாவிற்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிடுவது-நெருக்கடி கொடுப்பது, இரஷ்யாவிற்கு எதிரான நாடுகளை ஒன்றிணைக்க முயற்சிப்பது உள்ளிட்ட பல வழிமுறைகளின் மூலம் உக்ரைனுக்கு வெளியிலிருந்து இப்போரை அமெரிக்காவே நடத்திக் கொண்டிருக்கிறது.
இரஷ்யாவும் சரி, உக்ரைன் மற்றும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியும் சரி, இப்போர் நீண்டகாலம் நீடிக்கலாம்; எனவே அதற்கான தயாரிப்புகளில் இறங்க வேண்டும் என்று கூறுகின்றன. போர் நிறுத்தத்திற்கோ அமைதிப் பேச்சு வார்த்தைக்கோ எந்த தரப்பும் தாயாரில்லை. குறிப்பாக, உக்ரைனை பலிகடாவாக்கி இரஷ்யாவுக்கு எதிரான பதிலிப் போரை (Proxy War) நடத்திவரும் அமெரிக்கா பின்வாங்கத் தயாராக இல்லை. தீவிரப் போர் வெறியோடு செயல்பட்டு வருகிறது.
போரின் நெருக்கடிகள் மக்களின் தலையில்..
ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான இந்த நாய்ச்சண்டையில் பலியாகிக் கொண்டிருப்பதோ உக்ரைன் உழைக்கும் மக்கள்தான். போரில் தாம் கொல்லப்பட்டுவிட்டால், தம் குழந்தைகளை அடையாளம் கண்டுகொள்வதற்காக முதுகில் முகவரிகளை எழுதும் பெற்றோர்களின் அவலம் குறித்த செய்தி நமது நெஞ்சை உலுக்குகிறது. உக்ரைனில் அரசாட்சி செய்கிற நவநாஜி கும்பலோ போரில் இரஷ்ய இராணுவம் முன்னேறுவதைத் தடுக்க பெண்கள், குழந்தைகள் என சொந்த நாட்டு மக்களையே மனிதக் கேடயமாகப் (Human Shield) பயன்படுத்தி வருகின்றனர்.
போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட (40,19,287) மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளியேறியவர்களில் 90 சதவிகிதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். 18 முதல் 60 வயது வரையுள்ள ஆண்கள் கட்டாய இராணுவ சேவைக்கு தேவைப்படுவார்கள் என்பதால், உக்ரைன் நாஜி அரசு வெளியேற அனுமதிக்கவில்லை.
ஆனால், இரஷ்யப் படையினரே உக்ரைன் குடிமக்களைக் கொத்துக் கொத்தாக கொன்றுகொண்டிருப்பதாக, ஒருதலைபட்சமான பல பேய்க்கதைகளை உலாவ விட்டுக் கொண்டிருக்கின்றன அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள்.
இரஷ்யா உலக அளவில் பெட்ரோல் உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. பலநாடுகளின் கோதுமை தேவைகள் உக்ரைன், இரஷ்யாவின் ஏற்றுமதி மூலமே நிறைவுசெய்யப்பட்டுக் கொண்டிருந்தன. எனவே இப்போரின் காரணமாக உலக நாடுகளில் எரிவாயு விலை உயர்ந்து காணப்படுகிறது; பல நாடுகளில் கோதுமைக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் பல உற்பத்திப் பொருட்களின் மூலப்பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு எனப் போர் உண்டாக்கியிருக்கும் நெருக்கடிகள் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் தலையிலேயே விழுகின்றன.
மூன்றாம் உலகப்போர் அபாயம்!
ஏப்ரல் 24 அன்று உக்ரைனுக்கு சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கனும் பாதுகாப்புத்துறைச் செயலர் லொயிட் ஆஸ்டினும் இரஷ்யாவை இராணுவ ரீதியில் முடமாக்குவதே இப்போரில் எங்களது (அமெரிக்கா) நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்தனர்.
அமெரிக்காவின் செல்லப் பிராணியான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “எங்களுக்குத் தேவை ஆயுதங்கள், மென்மேலும் கூடுதலான ஆயுதங்கள்” என்று எஜமானருக்குத் தோதாக ஊளையிடுகிறார். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இங்கிலாந்தும் இப்போரில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. இரஷ்யாவின் எல்லையை ஒட்டிய கிழக்கு ஐரோப்பில் தனது 8,000 துருப்புகளை நிறுத்தி வைத்துள்ளது.
இரஷ்யாவை எதிர்கொள்வதற்காக உக்ரைனுக்கு மலைமலையாக பணத்தை வாரியிறைத்து வருகிறது அமெரிக்க அரசு. போர் தொடங்கியபோது உடனடியாக 1.3 கோடி டாலர்களை வழங்கியது. மார்ச் மாத தொடக்கத்தில் 20 கோடி டாலர்களை ஒதுக்கியது. பிற்பாடு சிறிது நாட்களிலேயே 80 கோடி டாலர்களை அறிவித்தது. தற்போது உக்ரைனுக்கு உதவுவதற்காக 3,500 கோடி டாலர்கள் வரை வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார் அதிபர் பைடன்.
நிதி உதவி மட்டுமல்லாது விமான எதிர்ப்பு கருவிகள், பீரங்கிகள், ஏவுகணைகள், அதிநவீனத் துப்பாக்கிகள் உள்ளிட்ட கொடிய போர்க் கருவிகளையும் தனது உளவுத்துறையின் உதவியையும் உக்ரைனுக்கு வழங்கி வருகிறது அமெரிக்கா.
தன் நாட்டு ஆயுதங்களை உக்ரைனுக்கு தங்குதடையின்றி வழங்குவதற்காக ‘உக்ரைன் – ஜனநாயக பாதுகாப்புக் கடன் மற்றும் குத்தகைச் சட்டம் 2022’-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார் பைடன். இரண்டாம் உலகப்போரின்போது, இங்கிலாந்துக்கு தன்னுடைய ஆயுதங்களை வழங்குவதற்காக, முதன்முதலாக 1941-ம் ஆண்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது உக்ரைனுக்காக அதை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் பைடன். குடியரசுக் கட்சியும் ஜனநாயக கட்சியும் இணைந்து பெரும்பான்மை ஆதரவோடு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளன.
அமெரிக்கா மட்டுமல்லாது 30 உறுப்பினர்களைக் கொண்ட நேட்டோ கூட்டமைப்பு நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிவருகின்றன. இராணுவ வல்லரசான இரஷ்யாவினுடைய தாக்குதலை உக்ரைன் இத்தனை நாள் சமாளிப்பதற்குப்பின் உள்ள காரணம் இதுவே.
மேலும் ஏப்ரல் 19 அன்று ஜெர்மனியில் அமெரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகள் உள்ளிட்டு 43 நாடுகள் ஒன்றுகூடி, போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். உக்ரைனுக்கு போர்ச் செலவினங்களுக்காக நிதி உதவி, ஆயுத உதவி ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நாடுகள் முன்வந்திருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் தங்களது திட்டம் பற்றி இக்கூட்டமைப்பு நாடுகள் ஆலோசிக்க இருக்கின்றன.
நிலைமைகளை அவதானிக்கும்போது, இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பனிப்போர் மூன்றாம் உலகப் போருக்கான அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது. இதனை அமெரிக்காவும் இரஷ்யாவுமே மாறிமாறிச் சொல்லிக் கொள்கின்றன. எனவே இருதரப்புமே எந்தவிதக் கூச்ச நாச்சமுமின்றி, அம்மணமாக தங்களது நோக்கங்களை அறிவித்துக் கொண்டு, போர்த் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.
இரஷ்ய-உக்ரைன் போரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் அமெரிக்காவுக்கும் இரஷ்யாவுக்கும் நடைபெற்ற பனிப்போரைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும். இதற்காக 1950-களின் பிற்பகுதி தொடங்கி, 1991 வரையுள்ள காலகட்டம் மற்றும் 1991-லிருந்து தற்போது வரையிலான காலகட்டம் என இரண்டாகப் பிரித்து, நிகழ்வுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில், அமெரிக்காவானது ஏகாதிபத்திய முகாமிலேயே தலைமை தாதாவாக – மேல்நிலை வல்லரசாக வளரத்தொடங்கியது. 1950-களின் பிற்பகுதியில், சோசலிச நாடாக இருந்த சோவியத் யூனியனில் திருத்தல்வாதிகள் முதலாளித்துவத்தை மீட்டெடுத்தனர்; ஆகையால் சோசலிச சோவியத் யூனியன், சமூக ஏகாதிபத்தியமாக (சொல்லில் சோசலிசம்; செயலில் ஏகாதிபத்தியம்) சீரழிந்து அமெரிக்காவுடன் உலக ஆதிக்கத்திற்கான போட்டா போட்டியில் இறங்கியது.
இதற்கு முன்னதாக, 1945-ம் ஆண்டு – இரண்டாம் உலகப் போரின் முடிவில், பாசிச ஹிட்லரின் பிடியிலிருந்த நாடுகளை சோவியத் செம்படை விரட்டியடித்து அல்பேனியா, பல்கேரியா, செக்கோஸ்லோவாக்கியா, ருமேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் கிழக்கு ஜெர்மனி வரை விடுவித்திருந்தது. இந்த நாடுகளெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின்கீழ் சோசலிச குடியரசுகளாக மாறின.
இந்நிலையில், சோசலிசம் பரவிவருவதைக் கண்டு அச்சமுற்ற அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் சோவியத் யூனியனை எதிர்கொள்வதற்காக உருவாக்கிய அரசியல்-இரணுவக் கூட்டணியே நேட்டோ.
1949-ம் ஆண்டு அட்லாண்டிக் கடலின் வடபகுதியைச் சேர்ந்த நாடுகளான பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐலாந்து, இத்தாலி, லுக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்சுகல், இங்கிலாந்து, அமெரிக்கா என 12 நாடுகள் ஓர் ஒப்பந்தத்தின் மூலம் நேட்டோவை ஏற்படுத்தின. வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் அமைப்பு என்பதன் சுருக்கமே நேட்டோ (NATO) ஆகும்.
மறுபக்கம் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளை தனது சுரண்டலுக்கான தொங்கு சதை நாடுகளாக ஆக்கிக் கொண்டது சோவியத் சமூக ஏகாதிபத்தியம்; மேலும் 1955-ம் ஆண்டு நேட்டோவை எதிர்கொள்வதற்காக அந்நாடுகளை ஒருங்கிணைத்து வார்சா ஒப்பந்த அமைப்பை (WTO) ஏற்படுத்தியது. இதுவும் நேட்டோவைப் போலான அரசியல்-இராணுவக் கூட்டணியாகும்.
சுமார் 35 ஆண்டு காலத்திற்குமேல் நடைபெற்ற பனிப்போரில், 1990-1992களில் அரசியல் – பொருளாதார நெருக்கடிகளில் சிக்கிய சோவியத் சமூக ஏகாதிபத்தியம், அமெரிக்காவிடம் தோற்றது. 90-களின் இறுதியில் வார்சா கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. இரஷ்யாவுடனான சோவியத் கூட்டமைப்பிலிருந்து 14 நாடுகள் வெளியேறியதால் சோவியத் யூனியனும் சிதறியது. ஆனால் இதே காலகட்டத்தில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி கிரீஸ், துருக்கி, மேற்கு ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட நாடுகளை இணைத்துக் கொண்டு விரிவடைந்தது.
90-களுக்குப் பின் செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகள் 1999-ம் ஆண்டும்; பல்கேரியா, எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் 2004-ம் ஆண்டிலும்; அல்பேனியா மற்றும் க்ரோஷியா 2009-ம் ஆண்டிலும்; மண்டேநீக்ரோ 2017-ம் ஆண்டிலும்; 2020-ம் ஆண்டில் வடக்கு மாசிடோனியாவும் நோட்டோவில் இணைந்தன.
வட அட்லாண்டிக் பிராந்திய நாடுகளை மட்டுமே கொண்டிருந்த நோட்டோ படை, முன்னாள் சோவியத் உறுப்பு நாடுகள் உள்ளிட்டு பெரும்பான்மையான கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு உலகின் மிகப்பெரிய இராணுவக் கூட்டமைப்பாகத் திகழ்கிறது. தற்போது 30 நாடுகள் அதில் உறுப்பினர்களாக உள்ளார்கள்.
000
பனிப்போர் காலத்தில், மேலும் கிழக்கு நோக்கி எங்களது படைகளை விரிவுபடுத்த மாட்டோம் என்று இரஷ்யாவுக்கு கொடுத்த வாக்கை மீறியுள்ளது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ. தற்போது நேட்டோ நாடுகள் இரஷ்யாவை சுற்றிவளைத்துள்ளன.
உக்ரைனுக்கு போர் உதவிகள் வழங்குவது பற்றி நாடாளுமன்றத்தில் உரையாடும் அதிபர் பைடன்.
இரஷ்யாவின் நிலப்பகுதியை ஒட்டியுள்ள நாடுகளான லாத்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா ஆகியவை நேட்டோவில் இருக்கின்றன. தற்போது இரஷ்யாவுடன் மிகப்பரந்த அளவில் நிலப்பகுதியை பகிர்ந்துகொள்ளக்கூடிய உக்ரைனையும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளத் துடிக்கிறது அமெரிக்கா. உக்ரைனைப் போலவே நார்வே, ஸ்வீடன், போலந்து உள்ளிட்ட நாடுகளும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.
தனது மேலாதிக்கப் பரப்பை விரிபடுத்துவதோடு மட்டுமல்லாமல், இரஷ்யாவை சுற்றி வளைத்துத் தாக்கவும் உகந்த புவிசார் முக்கியத்துவமிக்கப் (Geo-political importance) பகுதியாக உக்ரைனைக் கருதுகிறது அமெரிக்கா. இதை முறியடிப்பதற்காகத்தான் இரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. எனவே இப்போர் ஒரு திடீர் நிகழ்வல்ல. அமெரிக்க-இரஷ்ய வல்லரசுகளுக்கு இடையிலான பனிப்போரின் தொடர்ச்சி.
அமெரிக்கப் பதிலிப் போரின் முன்தயாரிப்பு பணிகள்
2000-ம் ஆண்டிலிருந்து உலகின் இராணுவச் செலவு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2021-ம் ஆண்டு உலகளாவிய இராணுவச் செலவு சுமார் 2 டிரில்லியன் டாலர். இதில் பாதிக்கும் மேற்பட்டவை நேட்டோ நாடுகளைச் சேர்ந்தவை.
1991 முதல் 2021 வரையிலான காலங்களில் உக்ரைனுக்கு பெருமளவிலான இராணுவ உதவிகளை செய்திருக்கிறது அமெரிக்கா. 1991-2014 வரை சுமார் 380 கோடி டாலர் அளவிற்கான இராணுவ உதவிகளை செய்திருக்கிறது. அதுவே ஒப்பீட்டு நோக்கில் 2014-2021 வரையான குறுகிய ஆண்டுகளில், 240 கோடி டாலர் அளவிற்கான இராணுவ உதவிகளாக அதிகரித்திருக்கிறது.
இரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த பிறகுதான் அமெரிக்காவும் நேட்டோ கூட்டணியும் உக்ரைனுக்கு உதவிகள் வழங்கிவருகின்றனர் என்பது கிடையாது; ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா உக்ரைனை களமாகக் கொண்டு இரஷ்யாவுக்கு எதிரான பதிலிப் போருக்கு தாயரித்துள்ளது என்பதை விளக்கும் சித்திரம்தான் மேற்சொன்ன புள்ளிவிவரம்.
000
இசுலாமிய நாடுகளில் ஒசாமா பின்லேடன், ஐ.எஸ்.ஐ.எஸ்., தாலிபான் உள்ளிட்ட இசுலாமிய தீவிரவாதக் குழுக்களை வளர்த்துவிட்டதைப் போல் அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ.வும் அந்நாட்டின் இராணுவத் தலைமையகமும் 500 கோடி டாலர் செலவுசெய்து உக்ரைனில் அசோவ் எனும் நவநாஜிக் கும்பல்களை வளர்த்துவிட்டுள்ளது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில், இரஷ்யப் படையினரை எதிர்த்து சண்டையிடுவது உக்ரைன் இராணுவம் மட்டுமல்ல, அவர்களோடு இணைந்து அசோவ் பட்டாலியன் எனும் நவநாஜி ஆயுதப் படையும் சண்டையிட்டு வருகிறது. அமெரிக்கா அனுப்பும் ஆயுதங்கள் இக்குழுவினரின் கட்டுப்பாட்டிற்கே செல்கின்றன.
உக்ரைனில் தனக்குச் சாதகமான பொம்மை ஆட்சியை உருவாக்க ஆட்சிக் கவிழ்ப்புகளையும் அமெரிக்கா நடத்தியிருக்கிறது. 2004-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இரஷ்ய ஆதரவாளரான விக்டர் யனுகோவிச் அதிபரானார். இதைப் பொறுக்காத அமெரிக்கா தனது விசுவாசக் கும்பல்கள் மூலம் உக்ரைனில் ‘ஆரஞ்சு புரட்சி’ என்ற பெயரில், ஆட்சிக் கவிழ்ப்பு சதியை அரங்கேற்றி அமெரிக்க ஆதாரவளரான விக்டர் யுஷ்செங்கோவை அதிபராக்கியது.
2010-இல் நடைபெற்ற தேர்தலில், இரஷ்ய ஆதரவாளரான யனுகோவிச் மீண்டும் அதிபரானார். இவர் இரஷ்யாவுடனான உறவை மீண்டும் புதுப்பிக்க விரும்பினார். இதற்கு எதிராக அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட நவநாஜிசக் கும்பல்கள் போராட்டங்களில் இறங்கின. இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் விளைவாக அதிபர் பதவியிலிருந்து யனுகோவிச் விலகினார். பாசிசக் கும்பல்கள் ஆட்சியைக் கைப்பற்றின. தற்போது ஆட்சியிலிருக்கும் ஜெலன்ஸ்கியும் நவநாஜிக் கும்பலின் ஆசி பெற்ற அதிபரே.
இனவெறி கொண்ட உக்ரைன் நவநாஜிக் கும்பல்கள் இரஷ்யர்கள் அதிகம் வாழும் கிரீமிய தீபகற்பம் மற்றும் டான்பாஸ் பிரதேசம் ஆகியவற்றில் இனவெறி அடக்குமுறை – அத்துமீறல்களை அரங்கேற்றி வந்தன. இந்த உள்நாட்டு இன அழிப்புப் போரில் 14,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இரஷ்யா 2014-ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின் மூலமாக கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது.