பேரறிவாளன் விடுதலை: “சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியா”?
தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியும் அவர்களின் சட்ட போரட்டமும்தான் காரணம் என்று கூறுவதன் மூலம் 31 ஆண்டுகால புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் போராட்டத்தையும், தோழர் செங்கொடியின் உயிர் தியாகத்தையும், அற்புதம்மாளின் போராட்டத்தையும் இந்த பிழைப்புவாத ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் குழி தோண்டி புதைக்கின்றன.
ராஜீவ் காந்தி கொலையில் ஜோடிக்கப்பட்ட ஒரு பொய் வழக்கிற்காக கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு கடந்த மே 18 அன்று உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பேரறிவாளனின் விடுதலை “சட்ட போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றும், தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதி 142 அடிப்படையில் திராவிட மாடல் சாதித்துக் காட்டிவிட்டது” என்றும் இந்தப் போலி ஜனநாயக சட்ட மாயையை நம்பும் அறிவுஜீவிகளும், தி.மு.க-வினரும், திராவிட மாடலுக்கு காவடி தூக்கும் கழக முத்துமணிகளும் சிலாகித்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், பேரறிவாளன் விடுதலை என்பது நீண்ட களப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. அதை மறைத்துவிட்டு தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியும் அவர்களின் சட்ட போரட்டமும்தான் காரணம் என்று கூறுவதன் மூலம் 31 ஆண்டுகால புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் போராட்டத்தையும், தோழர் செங்கொடியின் உயிர் தியாகத்தையும், அற்புதம்மாளின் போராட்டத்தையும் இந்த பிழைப்புவாத ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் குழி தோண்டி புதைக்கின்றன. இந்த துரோகத்திற்கு முதலாளித்துவ வேசி ஊடகங்களும் காவடி எடுக்கின்றன.
“ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது” என்று அரசியலமைப்பு சட்டம் சொல்லும் இதே நாட்டில்தான் 31 ஆண்டுகளாக ஒரு நிரபராதி சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார். அவருடன் கைதானவர்கள் இன்னும் அனுபவித்து வருகின்றனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் மட்டுமல்ல இந்தியாவில் சிறையில் அடைக்கபட்டிருப்பவர்களில் 69.05 சதவிகிதம் பேர் குற்றம் நிரூபிக்கப்படாமல்தான் பல ஆண்டுகளாக சிறையில் சித்திரவதை அனுபவித்து வருகின்றனர்.
தாமதமாக வழங்கப்படும் ஒவ்வொரு நீதியும் அநீதி என்பார்கள். அப்படி பேரறிவாளனுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு வக்காலத்து வாங்கும் இவர்கள் உணர்த்த வருவது “சட்டத்தின் ஆட்சி” வெங்காயத்தைதான். ஆனால், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இவர்களின் சட்டத்தின் ஆட்சியை பார்ப்பதற்கு பேரறிவாளன் வழக்கை பார்த்தாலே போதும். அப்படி பார்த்தாலே தெரியும், இந்த விடுதலை சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியா? இல்லை புரட்சிகர – ஜனநாயக சக்திகள் நடத்திய நீண்ட நெடிய களப் போராட்டங்களின் நிர்ப்பந்தத்தால் கிடைத்த வெற்றியா? என்று.
000
செங்கொடி
இனி வழக்கின் சட்ட வியாக்கியானத்தை பார்ப்போம். ராஜீவ் காந்தி கொலையின்போது உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்ட “இந்தியா பாதுகாப்பற்ற நாடு” என்ற பிம்பத்தை உடைப்பதற்காக தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் வேட்டையாடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதன்மையான குற்றவாளிகள் எல்லாம் தலைமறைவாகிவிட, குற்றத்துக்கு நேரடியாக தொடர்பே இல்லாத பேரறிவாளன் உள்ளிட்ட அப்பாவிகளுக்கு மரண தண்டனையும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஆனால் வழக்கு விசாரணை உண்மையான குற்றவாளிகளை நோக்கி துளி கூட நகரவில்லை என்பதையும், தண்டனை வழங்கப்பட்டவர்கள் யாவரும் நிரபராதிகள் என்பதையும் வழக்கை விசாரித்த அதிகாரிகளே பல இடங்களில் வெளிபடுத்தியுள்ளனர்.
“தானு வெடிக்கச் செய்த அந்த வெடிக்குண்டினைத் தயாரித்த நபர் யார் என்று கண்டறிய முடியவில்லை” என்று 2005-ஆம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி ஜூனியர் விகடனுக்கும், அதே ஆண்டு ஆகஸ்டு 10-ம் தேதி குமுதத்திற்கும் அளித்த பேட்டியில் புலனாய்வு குழுவிற்கு தலைமை வகித்த கே.இரகோத்தமன் ஒப்புக்கொண்டார்.
சிவராசனுக்கு மின்கலங்கள்(பேட்டரி) வாங்கிக்கொடுத்ததை ஒப்புக்கொண்ட பேரறிவாளன், அதன் பயன்பாடு குறித்தும் இராஜிவ் காந்தியின் படுகொலை குறித்தும் தனக்கு ஏதும் தெரியாது என்று அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பாதியை மட்டுமே பதிவு செய்ததாகவும் மீதியை விட்டுவிட்டதாகவும் புலனாய்வு அதிகாரியான தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
“பேரறிவாளனின் பங்கு குறித்து சி.பி.ஐ-க்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், சதியில் அவருக்கு தொடர்பில்லை என்பது இராஜீவ் கொலை விசாரணையின் அடுத்தடுத்த கட்டங்களில் உறுதியானது” என்று தியாகராஜன் கூறியதாக ’தி ஹிந்து’ பத்திரிகை தெரிவித்தது.
சுபா, தாணு மற்றும் தன்னைத் தவிர வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது என்று 1991-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த பொட்டு அம்மனுக்கு சிவராசன் அனுப்பிய தந்தித் தகவலை சான்றாக அவர் கூறினார். “வெறுமனே மின்கலங்களை வாங்கிக் கொடுத்தது இராஜீவ் கொலை சதிக்குற்றத்தில் ஈடுபட்டதாக ஆகாது” என்று அவர் மேலும் கூறியிருந்தார். சதியில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்பதற்கு அந்த தந்தியே சாட்சியாக இருக்கிறது.
ஆனால், பணியிலிருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்பதனை காரணம் காட்டி பேரறிவாளனுக்காக புலனாய்வு அதிகாரி தியாகராஜன் அளித்த வாக்குமூலத்தை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஆனால், இதே உச்சநீதிமன்றம்தான் பாபர் மசூதி இறுதித் தீர்ப்பில் இல்லாத ராம் லல்லாவை (குழந்தை ராமர்) சாட்சியாக எடுத்துக்கொண்டு, சதிகார அத்வானியையும் பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களையும் நிரபராதி என்று விடுவித்தது.
இதுதான் சட்டப் போராட்டத்தின் யோக்கியதை. சாட்சிகள், ஞாயம் யார் பக்கம் இருக்கின்றது என்பது முக்கியம் இல்லை. சட்டத்தை யார் வியாக்கியானம் செய்து நன்றாக வாதிடுகிறார்களோ அவர்களுக்குத்தான் சட்டத்தின் ஆட்சி படி நீதி. உலக வரலாற்றில் போர்க்களங்களுக்கு அடுத்து நீதிமன்ற வளாகங்களில்தான் சில மாபெரும் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி பேரறிவாளனுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதிதான் இரண்டு ஆயுள் தண்டனைகளுக்கு சமமான காலத்திற்கு அவரை சிறையில் அடைத்து வைத்திருந்தது.
பேரறிவாளனின் விடுதலை நமக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி தரக்கூடியதுதான். ஆனால், ஆங்கிலேய காலத்தில் இருந்து நிலவுகின்ற அரசு கட்டமைப்பே இப்படி பெரும்பான்மையான உழைக்கும் மக்களை ஒடுக்கும் கருவியாகதான் உள்ளது என்பதை பேரறிவாளன் வழக்கின் மூலம் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
தற்பொழுது ஆளுகின்ற பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் இந்து ராஷ்டிர ஆட்சிகாகவும், தனது எஜமானர்களான கார்ப்பரேட் முதலாளித்துவ வர்க்கத்திற்காகவும் நாட்டையே மறுகாலனியாக்க பாசிச நடவடிக்கைக்கு இட்டு சென்று கொண்டிருக்கின்றது. அதற்கு ஏற்றாற்போல் சட்டங்களையும் அரசு கட்டமைப்புகளையும் பாசிச மயப்படுத்துவதை நோக்கி வீச்சாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது மோடி அரசு.
குறிப்பாக, இந்த பாசிச நடவடிக்கையை எதிர்த்து குரல்கொடுக்கும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதற்காக குற்றவியல் திருத்தச் சட்டத்தை முற்றிலுமாக மாற்றியமைத்து தனக்கு எதிரான குரல்களை ஒடுக்க துடித்துக் கொண்டிருக்கின்றது.
இந்தப் பாசிச நடவடிக்கையை துளியும் கருத்திலும் பரிசீலனைக்கு உட்படுத்தாமல், செத்த பிணத்துக்கு பாலூட்டுவதுபோல் அழுகி உளுத்து பாசிசமயமாகி கொண்டிருக்கும் இந்த கட்டமைப்புக்கு காவடி தூக்கி கொண்டிருக்கின்றனர் பணம் திரட்டுகின்ற அற்பவாத சமரசவாதிகள்.
இந்த முதலாளி வர்க்கத்தினர் குழப்பிய குட்டையில் மீன் பிடிப்பது சுலபம் என்று இவர்கள் நம்புவது மட்டுமில்லாமல், உழைக்கும் மக்களையும் நம்ப வைக்கின்றனர். இத்தகைய சமரசப் பேர்வழிகளை நம்பி நமக்கு ஒரு போதும் விடியல் பிறக்காது என்பது உறுதி. நமக்கான விடியலை பாசிச எதிர்ப்பு களப்போராட்டங்கள் மூலம் நாம்தான் வென்றெடுக்க வேண்டும்.