மும்பை செஷன்ஸ் நீதிமன்றம், ஜூன் 21 அன்று ‘புல்லி பாய்’ & ‘சுல்லி டீல்ஸ்’ வழக்குகளில் இன்னும் காவலில் உள்ள மூன்று குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூவருக்கும் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் இப்போது ஜாமீனில் உள்ளனர்.
கடந்த ஜூலை 2021-ல் வெளிவந்த ‘Sulli Deals’ – GitHub என்ற உள்ளடக்கப் பகிர்வு தளமான GitHub-ல் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. முக்கிய முஸ்லீம் பெண்களின் ஒப்புதலின்றி, அவதூறான கருத்துக்களுடன் அவர்களின் படங்களைப் பயன்படுத்தி, அவர்களை இணையத்தில் ஏலம் விடும் செயலை அரங்கேற்றியது.
இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) கீழ் டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருந்தாலும் உடனடியாக கைது செய்யப்படவில்லை.
இந்த ஆண்டு ஜனவரியில், ‘புல்லி பாய்’ ‘சுல்லி டீல்ஸ்’ உடன் இணைந்த முக்கிய முஸ்லீம் பெண்களுக்கான ஏலங்களையும் நடத்தியது. மக்களின் எதிர்ப்புக்கு பிறகு போலீசார் இரண்டு வழக்குகளிலும் முதல் கைது செய்தனர்.
இரண்டு வழக்குகளிலும் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஔம்காரேஷ்வர் தாக்கூர் என்பவன் ‘சுல்லி டீல்ஸ்’ செயலியை உருவாக்கியவன். நீரஜ் பிஷ்னோய் என்பவன் ‘புல்லி பாய்’ செயலியை உருவாக்கியவன். இவர்களுடன் விஷால் குமார் ஜா, ஸ்வேதா சிங், மயங்க் அகர்வால் மற்றும் நீரஜ் சிங் ஆகிய 4 பேரும் இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
படிக்க :
♦ புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்
♦ டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு !
குற்றம் சாட்டப்பட்டவர்களில், ஜா, சிங் மற்றும் அகர்வால் ஆகியோருக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாந்த்ரா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது, தாக்கூர் மற்றும் பிஷ்னோய் ஆகியோருக்கு பாந்த்ரா நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது. எவ்வாறாயினும், இந்த இரண்டு செயலிகளையும் உருவாக்கியவர்களுக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியது. இருப்பினும், மும்பையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் பெயரில் போலீசு காவலில் இருந்தனர்.
***
தற்போது கூடுதல் அமர்வு நீதிபதி ஏ.பி. சர்மா, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரூ.50,000 ஜாமீன் பத்திரம் மற்றும் அதே தொகைக்கு ஒன்று அல்லது இரண்டு ஜாமீன்களுடன் சேர்த்து விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர்கள் மாதாந்திர சைபர் போலீசு நிலையத்திற்குச் செல்ல வேண்டும். நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியேற கூடாது என்று நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
வழக்கறிஞர் சிவம் தேஷ்முக் மூலம் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில், ஜாமீன் வழங்குவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கில் பொய்யாக இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படும் குற்றங்களைச் செய்யவில்லை என்றும் விண்ணப்பம் வாதிட்டது; அவர்கள் செயலியை உருவாக்கியவர்கள் அல்ல; வெறுமனே பின்பற்றுபவர்கள்; எனவே இது ஒரு குற்றமாகாது; மேலும் குற்றங்களுக்கான தண்டனை மூன்று வருடங்களுக்கும் குறைவாக இருப்பதால் சிறை தேவையற்றது. அவர்கள் ஏற்கனவே டெல்லி நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்றுள்ளதாகவும், அவர்களின் இணை குற்றவாளிகளுக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் விண்ணப்பம் வாதிட்டது. இறுதியாக, குற்றம் சாட்டப்பட்டவர் ‘மரியாதைக்குரிய’ குடும்பங்களைச் சேர்ந்தவர் என்றும், கூறப்படும் செயல் ‘கற்பனைக்கு அப்பாற்பட்டது’ என்றும் விண்ணப்பம் வாதிட்டது.
அரசின் சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர், இந்த வாதங்களில் பெரும்பாலானவற்றை எதிர்த்தார். இதுவரை சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக உள்ளது என்று வாதிட்டார். மேலும், அவர்களின் செயல்கள் தேசத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைத்து, அதன் ஒருமைப்பாட்டையும் பாதிக்கிறது என்று அவர் கூறினார். ஜாமீன் மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கை விடுத்த போதிலும், அது நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
‘புல்லி பாய்’ – ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலிகள் மூலம் முஸ்லீம் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக இழிவுப்படுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கியதன் மூலம், நீதிமன்றம் என்பது குற்றவாளிகளின் கூடாரமாகவும், உழைக்கும் மக்களுக்கு எதிர்நிலையாகவும் மாறிவிட்டது என்பதை நம்மால் உணர முடியும். முஸ்லீம் மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த நீதிமன்றம் உள்ளிட்ட பாசிச அரசு கட்டமைப்பிற்கு எதிராகவும், சங் பரிவார – கிருமினல் மாஃபியா கும்பல்களுக்கு எதிராகவும் நாம் களமிறங்க வேண்டியது அவசியம்.
காளி