ஏப்ரல் 2020-இல் கைது செய்யப்பட்ட பின்னரும் 15 மாதங்கள் தீரஜ் வாதவான் சொகுசு மருத்துவ மனைகளில் இருந்தார். 44 வயது தீரஜ்-க்கு செல்லுபடியான மருத்துவ காரணங்கள் 81 வயது வரவரராவிற்கு செல்லுபடியாகவில்லை.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதுப்படம் வெளியாவதைப்போன்று, ஓவ்வொரு வாரமும் ஒரு மோசடி வெளியாகிறது. அந்த வரிசையில் இந்த வார வெளியீடு தேவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் (Dewan Housing Finance Limited) நிறுவனம் செய்த மோசடி.
17 வங்கிகள் (Consortium) இணைந்து தந்த ரூ.34,615 கோடி கடனை மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) மற்றும் அதன் இயக்குநர்கள் கபில் வாதவான், தீரஜ் வாதவான் உள்ளிட்ட பலர் மீது சி.பி.ஐ கடந்த புதன்கிழமை (ஜுன் 17) வழக்கு பதிவு செய்துள்ளது. இதுவரை சி.பி.ஐ பதிவு செய்த வங்கி மோசடி வழக்குகளில் மிகப்பெரிய வழக்கு இதுவாகும்.
2020 மார்ச் மாதம் யெஸ் வங்கியின் தலைமை செயல்அதிகாரி ரானா கபூர் வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். அவரும், DHFL நிறுவனத்தின் உரிமையாளர்களான கபில் வாதவானும் தீரஜ் வாத்வானும் இணைந்து செய்த மோசடியை சி.பி.ஐ மற்றும் அமலாக்க இயக்குனரகமும் விசாரித்தன. அதன் பின்னர் ஏப்ரல் 2020-இல், கபில் வாதவானும் தீரஜ் வாத்வானும் கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து 2022 மே மாதம் டெல்லி நீதிமன்றம் தந்த பிணையில் வெளிவந்தனர். அதற்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் பலமுறை நீதிமன்றங்களால் பிணை மறுக்கப்பட்டாலும் தீரஜ் வாதவான் சிறையில் இருந்த காலம் 9 மாதங்கள் மட்டுமே.
மீதமுள்ள 15 மாதங்களை, தீரஜ் வாதவான் நோய்களைக் காரணம்காட்டி மருத்துவமனைகளில் இருந்துள்ளார். மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் 10 மாத காலம் தங்கியிருந்த காலகட்டமும் இதில் அடங்கும். கூட்டுக் களவாணிகள் ஒருவொருக்கொருவர் உதவிக் கொள்வதுதானே தொழில் தர்மம். உனக்கு நான், எனக்கு நீ துணையாக.
இந்த மோசடி வெளிவராமல் இருந்திருந்தால் வாதவான் சகோதரர்களுக்கு நோய் வந்திருக்காது.
தீவிர கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது (ஏப்ரல் 2020) மராட்டிய மாநிலத்திலிருந்து மகாபலிபுரத்திற்கு சொகுசு பங்களாவிற்கு சமையல்காரர்கள், வேலைக்காரர்கள் சகிதம் சொகுசு கார்களில் வந்திறங்கினர் வாதவான் குடும்பத்தினர். ரூ.100-க்கு கத்திரிக்காய் வாங்கச் சென்றவர்களை விரட்டிவிரட்டி அடித்த போலீசு, வாதவான் குடும்பத்தினருக்கு சிறப்பு அனுமதி தந்தது. இதில் கேலிக்கூத்து என்னவெனில், மகாபலிபுரம் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் யெஸ் வங்கி ரானா கபூருடன் இணைந்து செய்த மோசடி வழக்கில் விசாரணக்காக அழைத்தபோது கொரோனாவைக் காரணம்காட்டி விசாரணைக்கு செல்லவில்லை. மார்ச் மாதம் இருந்த நோய் அச்சுறுத்தல் ஏப்ரல் மாதத்தில் மகாபலிபுரத்திற்கு ஆடம்பரச் சுற்றுலாவிற்கு வந்தபோது இல்லை. ரூ.300 சம்பளத்திற்கு 3,000 கிலோ மீட்டர் பயணம் செய்துவந்த வடமாநில தொழிலாளர்களை நடக்கவிட்ட அரசுகள் 30,000 கோடி மோசடி செய்த வாதவான் சகோதரர்களை மூன்று மாநில எல்லைகள் கடந்து ராஜ மரியாதையோடு சொகுசு பங்களாவிற்கு அனுப்பி வைத்தன.
DHFL நிறுவனத்தின் சேர்மன் கபில் வாதவான் கைது செய்யப்படும் வரை, அந்நிறுவனத்தின் அறிவுஜீவி முகமாக பல தொலைக்காட்சிகளில் தன் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தார். அதுவரை அவரை அறிவு ஜீவியாக காட்டிக் கொண்டிருந்த ஊடகங்கள் தற்போது வில்லனாக காட்டுகின்றன. ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, சி.சி.டீவி.யில் மாட்டும் வரை சாமியார், மாட்டிவிட்டால் போலிச் சாமியார் என்பதைப் போல தனியார்மயத்தில் மாட்டும் வரை அறிவு ஜீவி, மாட்டிவிட்டால் பிராடு. தனியார்மயத்தைப் பொறுத்தவரையில் மாட்டியவன் சிறைக்கு உள்ளே இருப்பான். மாட்டாதவன் வெளியே கோட்டு சூட்டு போட்டு இருப்பான். அவ்வளவு தான். தவறு செய்யாதவன் என்பவனில்லை. மாட்டாமல் தவறு செய்வதைக் கற்றுக் கொள் என்கிறது தனியார்மய பெருந்தத்துவம். தீரஜ் வாதவான் போல் திறமைசாலியாக இருந்தால், கைது செய்யப்பட்ட பின்னரும் சொகுசு மருத்துவமனையில் ஓய்வெடுக்கலாம்.
கபிலின் தம்பி தீரஜ் வாதவானும் சளைத்தவர் இல்லை. அண்ணன் அறிவுஜீவியாக அறியப்பட, தம்பி தீரஜ் திவான் மும்பை வட்டாரத்தில் பாபா திவான் என்று அறியப்பட்டவர். பாலிவுட் நட்சத்திரங்களுடன் நெருங்கிய நட்பு, பல சொகுசு கார்கள், எண்ணற்ற பாடி கார்டுகள் (தனிப் பாதுகாவலர்கள்) என சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். முதலாளித்துவ மொழியில் சொல்ல வேண்டுமானால், “வாழ்ந்தா இவரை மாதிரி வாழனும்னு” எனும் அளவிற்கு வாழ்ந்தவர். யார் உழைப்பில்? யார் காசில் சொகுசு வாழ்க்கை?
வேர்வை சொட்ட, ரத்தம் சிந்தி உழைத்து, ரூ.1, ரூ.2 என மிச்சம் பிடித்து பாதுகாப்பாக இருக்கட்டும் என உழைக்கும் மக்கள் வங்கியில் போட்ட பணத்தில் சொகுசாக தின்று கொழுத்திருக்கிறார்கள் வாதவான் குடும்பத்தினர்.
மோசடி வழக்கு விவரங்களுக்குள் போக விரும்பவில்லை, பல வழக்குகளில் நாம் பார்த்த கதைதான். தொழில் நடத்துகிறோம் என்ற பெயரில் கடன் வாங்கி, பணத்தை திசை திருப்பி, கடனை முறையாக திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததுதான் கதை. விஜய் மல்லையா, முகுல் சோக்சி, நீரவ் மோடி, அனில் அம்பானி என பல பெயர்களில் வரும் ஒரே கதை. தனியார்மய உலகில் திரும்பத் திரும்ப வெற்றிகரமாக ஓடும் கதை.
யெஸ் வங்கி (Yes Bank), பஞ்சாப் – மகாராஷ்டிரா வங்கி (PMC Bank) சரிந்து கீழே விழ காரணமாக இருந்தவர்கள் வாதவான் குடும்பத்தினர் நடத்திய நிறுவனங்கள். அதற்கு துணையாக இருந்தவர்கள் யெஸ் வங்கி தலைமைச் செயல் அதிகாரி ரானா கபூரும், PMC வங்கியின் நிர்வாகிகள் சிலரும். இது தவிர யூனியன் வங்கி, எஸ்.பி.ஐ என ஏமாந்த வங்கிகளின் எண்ணிக்கை 17. ஏமாந்த ரூ.34,615 கோடி ஒருபோதும் திரும்ப கிடைக்காது. வாதவான் குடும்பத்தின் சொத்துகளை பறிமுதல் செய்து ஏலம் விடுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். 2012-இல் விஜய் மல்லையாவின் மோசடிகள் வெளி வந்தாலும், இன்று வரை விஜய் மல்லையா கைது செய்யப்படவிலலை. சொத்துக்கள் முழுமையாக பறிமுதல் செய்யப்படவும் இல்லை. மல்லையோவோ இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து, இலண்டனில் தனது ஆடம்பர வாழ்வை தொடர்கிறார்.
யெஸ் வங்கி மோசடி வழக்கில் ஏப்ரல் 2020-இல் கைது செய்யப்பட்டு, மே 2022-இல் சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி பிணையில் வந்த வாதவான் சகோதரர்கள் மீது யுனியன் பாங்க் ஆஃப் இந்தியா தந்த வழக்கில் தற்போது மீண்டும் குற்றச் சாட்டப்பட்டுள்ளனர். மே 2022-இல் பிணை கிடைத்தாலும், பல வழக்குகளில் குற்றஞ்சாட்டப் பட்டிருப்பதால், நீதிமன்றக் காவலில்தான் உள்ளனர். பல கோடி ரூபாய் மோசடி செய்தது வெளிப்படையாக தெரிந்தாலும், பிணை கிடைக்க சட்ட நுணுக்கங்கள் கிடைத்தைப் போன்று, தற்போது குற்றஞ் சாட்டப்பட்டிருக்கும் ரூ.34,615 கோடி மோசடி வழக்கில் இருந்து வெளிவர சட்டத்தில் ஓட்டைகள் (அது தான் சட்ட நுணுக்கம்) கிடைக்காதா என்ன? எந்த சட்ட நுணுக்கத்தைப் பயன்படுத்தி முகுல் சோக்சியும், விஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் சிறைக்குள் வராமல் வெளி நாடுகளில் சுற்றுகிறார்களோ, அதே சட்ட நுணுக்கங்கள் வாதவான் சகோதரர்களுக்கு கிடைக்கும். சட்ட நுணுக்கங்களை கண்டுபிடிக்க திறமையான வழக்கறிஞர்களும் கிடைப்பார்கள். அதற்கான சாட்சி வாதவான் சகோதரர்களிடமே உண்டு.
ஆதாரம் 1: ஏப்ரல் 2020-இல் கைது செய்யப்பட்ட பின்னரும் 15 மாதங்கள் தீரஜ் வாதவான் சொகுசு மருத்துவ மனைகளில் இருந்தார். 44 வயது தீரஜ்-க்கு செல்லுபடியான மருத்துவ காரணங்கள் 81 வயது வரவரராவிற்கு செல்லுபடியாகவில்லை. காரணம் என்ன? மக்கள் பணத்தை தீரஜ் மோசடி செய்திருந்தாலும், இந்த முதலாளித்துவ அமைப்பிற்கு மோசடி செய்யவில்லை. மாறாக, அமைப்பை கட்டமைக்க உதவினார். வரவரராவிற்கு அந்த திறமை இல்லை. இந்த மோசடி அரசாங்களை எதிர்த்தார். எனவே ஏராளமான உடல் உபாதைகளோடு, சாகப் போகிற 81 வயதிலும் வரவரராவிற்கு சிறை. திரஜ்ஜிற்கு சொகுசு மருத்துவமனை.
ஆதாரம் 2: கபில் மற்றும் தீரஜ் வாதவனால் ஏமாற்றப்பட்ட வங்கிகள் அவர்களுக்கு எதிராக அக்டோபர் 18, 2019 அன்று லுக்அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டாலும், ஆறு மாதங்கள் கழித்தே கைது செய்யப்பட்டனர்.
கூடுதலாக DHFL நிறுவனம் பாஜகவிற்கு 27.5 கோடி நன்கொடை தந்துள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. தனக்கு அள்ளித் தந்த கருணை வள்ளல்களை கண்டிப்பாக பாஜக அரசு தண்டிக்காது.
கடந்த பிப்ரவரி மாதம் ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் 22,842 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குத் தொடர்ந்த போதும், இதுவரை நடந்த வங்கி மோசடி ஊழல்களில் இதுதான் மிகப் பெரிய மோசடி எனச் சொல்லப்பட்டது. அந்த சாதனையை தேவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் முந்திவிட்டது. தனியார்மயம் செய்துவரும் மெச்சந்தகுந்த சாதனைகளில் இதுவும் ஒன்று. எங்கும் எதிலும் தனியார்மயம் என்றாகிவிட்ட பின்னர், ஊழல்களின் அளவும் எண்ணிக்கையும் அளவில்லாமல் போய்விட்டன.
அடுத்தமுறை DHFL நிறுவன மோசடியை மிஞ்சி சாதனை படைக்கும் மோசடி வெளிவரும். அதற்கான அத்தனை தகுதியும் தனியார்மயத்திற்கு உண்டு. ஏனெனின் ஊழலின் ஊற்றுக் கண் தனியார்மய கொள்கைகளில் உள்ளது.