கம்யூனிசப் பேராசான் தோழர் லெனின் 155 ஆவது பிறந்தநாள்!
பாசிசத்தை வீழ்த்தும் போராட்டத்தில் கலைப்புவாதத்தையும் திரிபுவாதத்தையும் முறியடிப்போம்!
ஏப்ரல் 22 – உலகின் ஆறில் ஒரு பங்கு நிலப்பரப்பில் புரட்சியின் மூலம் முதலாளித்துவத்தை வீழ்த்தி, சோசலிசத்தை நிறுவிக் காட்டிய தோழர் லெனினின் 155வது பிறந்தநாள்.
ரசியாவில் 1905 இல் நடைபெற்ற புரட்சியானது ரசிய மக்களுக்கு தங்களின் விடுதலைக்குத் தலைமையேற்கப் போவது போல்ஷ்விக்குகள் தான் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது. 1917 நவம்பர் புரட்சியில் அதுதான் நடந்தது.
1905 ஆம் ஆண்டு, ஜனவரி 3 அன்று, செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள மிகப்பெரிய தொழிற்சாலையான புடிலோவ் ஒர்க்ஸில் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தம் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, போலீசின் கைக்கூலியான கோபன் என்ற பாதிரியாரின் தலைமையில் ஜனவரி 9 அன்று ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, குளிர்கால அரண்மனைக்குப் பேரணியாகச் சென்று, ஜார் மன்னனிடம் கையேந்துவது என்ற துரோகத் திட்டம்தான் அது. இதன் மூலம் தொழிலாளி வர்க்கப் புரட்சியை ஒழித்துக் கட்டுவதுதான் நோக்கம்.
அவ்வாறு சென்ற தொழிலாளர்கள், ஜாரின் படைகளால் ஆயிரக்கணக்கான பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்துயரச் சம்பவம் ‘இரத்த ஞாயிறு’ என்று அழைக்கப்படுகிறது. இச்சம்பவத்தின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை போராட்டத்தின் மூலம் மட்டுமே, புரட்சியின் மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதை நடைமுறையிலிருந்து உணர்ந்தார்கள். “ஜார் நமக்கு துப்பாக்கிக் குண்டுகளைக் கொடுத்தான், இப்போது நாம் அவனுக்கு அதைத் திருப்பிக் கொடுப்போம்” என்று முழங்கினார்கள்.
இச்சம்பவத்திற்குப் பின் ரசியாவில் புரட்சி பற்றிப் பரவத் தொடங்கியது. போல்ஷ்விக்குகள்தான் தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் உறுதியாக நின்று வழிகாட்டினார்கள். ஆனால் மென்ஷ்விக்குகளோ, தொழிலாளிகளைக் குறை கூறிக் கொண்டிருந்தார்கள்.
1905 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கிய புரட்சிப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு, ஜாரின் மந்திரி ஸ்டாலோபின் நாடெங்கும் தூக்குமேடைகளைத் தீர்மானித்தான். பல்லாயிரக்கணக்கான புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர். ஸ்டாலோபின் பிற்போக்குக் காலத்திலும் தோழர் லெனினின் தலைமையில் போல்ஷ்விக்குகள் மட்டுமே உறுதியாகப் புரட்சியைப் பற்றி நின்றனர்.
மென்ஷ்விக்குகளோ சந்தர்ப்பவாத நிலையெடுத்து தொழிலாளி வர்க்கத்துக்கும், புரட்சிக்கும் துரோகமிழைத்தனர். மார்க்சியத் தத்துவ அடிப்படைகளின் மீதே போர் தொடுத்தனர். அத்துடன் கட்சி கலைப்புவாதத்தையும் முன்வைத்தனர்.
படிக்க: இஸ்ரேலின் இன அழிப்புப் போர்: உலகக் போர்களில் கொல்லப்பட்டதை விட அதிக பத்திரிகையாளர்கள் படுகொலை
மென்ஷ்விக் கும்பலின் சந்தர்ப்பவாதத்தை சித்தாந்த ரீதியாக முறியடிக்கும் வரலாற்றுக் கடமை லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகளையே சார்ந்திருந்தது. 1909 இல் “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற நூலை எழுதி, சித்தாந்த ரீதியாக சந்தர்ப்பவாதத்தை முறியடித்தார்.
தொழிலாளி வர்க்கம் புரட்சியில் போல்ஷ்விக்குகளின் தலைமையை ஏற்றுக் கொள்வதற்கு, 1905 புரட்சி மற்றும் ஸ்டோலோபின் அடக்குமுறை ஆகிய காலகட்டங்களில், தோழர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் சித்தாந்த ரீதியாகவும், நடைமுறையிலும் தொழிலாளி வர்க்கத்தின் பக்கமும், புரட்சியின் பக்கமும் உறுதியாக நின்றதே அடிப்படைக் காரணமாகும்.
இதனை இன்றைய சூழலோடு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். இந்தியாவில் பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்கு, பாசிச எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதற்கு நாம் ஆசான் லெனினிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
பாசிஸ்டுகளை நாடாளுமன்றத்தில் வீழ்த்தி விட முடியும் என்றோ, பாசிச எதிர்ப்பு என்றால் நிபந்தனையின்றி தி.மு.க-வை ஆதரிக்க வேண்டும் என்றோ, இந்தியாவில் பாசிசத்தை மென்மைப் போக்கு கொண்டதாக வரையறுக்கும் சி.பி.எம்-இன் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளைக் கொண்டோ ஒருபோதும் பாசிசத்தை வீழ்த்த முடியாது. இவையனைத்தும் முதலாளித்துவ சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளே.
பாசிசத்தை நேருக்கு நேர் களத்தில் மட்டுமே, மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலமே வீழ்த்த முடியும் என்பதை இந்தியா முழுவதும் பாசிசத்திற்கு எதிராகப் போராடும் மக்களின் போராட்ட அனுபவங்கள் உணர்த்துகின்றன.
ஸ்டாலோபின் பிற்போக்கு அடக்குமுறைக் காலத்தில் கட்சியை விட்டு ஓடிய கலைப்புவாதிகளிடம் இருந்தும், திரிபுவாதிகளிடம் இருந்தும் மார்க்சியத் தத்துவத்தைப் பாதுகாத்தார் தோழர் லெனின்.
தோழர் லெனின் காட்டிய பாதையில், கலைப்புவாதத்தையும் திரிபுவாதத்தையும் தோலுரிப்போம். உழைக்கும் மக்களின் நலனைச் சார்ந்து உறுதியான நிலைப்பாட்டில் ஊன்றி நிற்போம். மக்கள் எழுச்சியை உருவாக்குவோம்! ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்துவோம்!
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram